சமீபத்திய பக்கங்கள்


என் பக்கம்

My Photo
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடேமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
View my complete profile

Search

Rss Posts

Rss Comments

Login

 

“மனுஷங்கதான நாம எல்லாம்..!”

30 May 2009

“டோக்கன் நம்பர் எட்டு” என்று அழைக்கப்பட்டவுடன் இவர் வேகமாக கவுண்டர் பக்கம் சென்றார். “எவ்வளவு சார்” என்று கண்ணாடிக் கூண்டுக்குள்ளிருந்து அந்த கேஷியர் கேட்டார். “ஆயிரம் “ என்றார். சடசடவென்று பணத்தை எண்ணி பாஸ்புக்கோடு தந்து விட்டு, அடுத்த டோக்கனை அழைக்க ஆரம்பித்தார். இவர் ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று பணத்தை எண்ணினார். ஐயாயிரம் இருந்தது! கேஷியரைப் பார்த்தார். அவர் வேறு யாருக்கோ பணத்தை எண்ணிக் கொண்டு இருந்தார். விளங்கிவிட்டது. பத்து நூறு ருபாய்த் தாளுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய்த் தந்து விட்டார். தயக்கமாய் இருந்தது. யாரும் தன்னையும், கையிலிருக்கும் பணத்தையும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும்  பார்த்தார். பணத்தை பையில் வைத்துவிட்டு மெல்ல நகன்றார். நடுக்கமாய் இருந்தது.

உரக்கடையில் வந்து உட்கார்ந்த பிறகு இவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. வெயில் என்றைக்கும் விட அதிகமாய் இருந்தது. அவிந்து போனார். மதியத்திற்கு மேல் வங்கியில் கணக்கு முடிக்கும் போது, பணம் குறைந்ததை கண்டுபிடித்துவிடுவார்கள். எப்படிக் குறைந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாது. தன்னிடம் அதிகமாய் பணம் கொடுத்ததற்கு என்ன ஆதாரமும் இருக்காது. படபடவென்று அடித்தது. காளிமுத்துவிடம் வாங்கிய கடனுக்கான இரண்டு மாத வட்டியை கொடுத்துவிட முடியும். காலையில் வந்துகூட தாறுமாறாய்ப் பேசிவிட்டுப் போய்விட்டான். என்ன செய்ய. தொழில் பண்ணுகிற மாதிரியா இருக்கிறது.

“யாரும் வந்து என்னை கேட்டால், சாப்பிடப் போயிருக்காங்க என்று சொல்லு” கடையில் இருந்த பையனிடம் சொல்லி வீட்டிற்குச் சென்றார். “என்னங்க... என்ன நினைப்பில் இருக்கீங்க... மோர் ஊத்திச் சாப்பிடாம கையக் கழுவிட்டீங்க” என்றார் அவரது மனைவி. கடைக்குத் திரும்பும் போது, ஒரு பைக்கில் அடிபடப் பார்த்தார். சுற்றியிருந்தவர்கள், கவனமில்லாமல் போனதற்கு இவரைத் தான் சத்தம் போட்டார்கள். கடைக்கு வந்து பையனை சாப்பிட அனுப்பி விட்டு உட்கார்ந்தார். கரண்ட் போய் விட்டது. வேர்த்து வழிந்தது.

பணத்தைத் திரும்ப ஒருமுறை எண்ணினார். பாஸ்புக்கோடு பீரோவில் வைத்தார். தெருவில் போய் வருகிறவர்களில் எல்லோரும் கடையைப் பார்த்த மாதிரி இருந்தது. நேரம் ஆக, ஆக பதற்றம் கூடியது. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் “இல்லையே, ஆயிரம் ருபாய் தானே தந்தீர்கள்” என்று சொல்வதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்.

ஆறு மணிக்கு மேல் அவர்கள் மூன்று பேர் வந்தார்கள். கேஷியரும் இருந்தார். முகம் ரொம்ப வாடியிருந்தது. இவர் எதுவும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக்கொண்டு “என்ன சார்..” என்றார். கேஷியர்தான் தயங்கித் தயங்கி ஆரம்பித்தார். “கணக்கு முடிக்கும்போது நாலாயிரம் ருபாய் குறைஞ்சுது... எப்படிப் போச்சுதுன்னு தெரியல. ஒருவேளை பத்து நூறு ருபாய் நோட்டுக்குப் பதிலா பத்து ஐநூறு ருபாய் நோட்டத் தந்துட்டோமோ என்று ஆயிரம் ருபாய் கணக்கிலிருந்து எடுத்தவங்கக்கிட்ட கேட்டுக்கிட்டு வாரோம். நாலு பேரை இதுவரைக்கும் பாத்துட்டோம். நீங்களும் ஆயிரம் ருபாய்தான் எடுத்துருக்கீங்க.... அதான்..” என்று இழுத்தார்.

“அப்படியா சார்... பேங்க்ல கொடுத்த பணத்த அப்படியேக் கொண்டு வந்து பீரோலத்தான் வச்சேன். பாக்கிறேன்” என்று பீரோவைத் திறந்து பாஸ்புக்கிற்குள் இருந்த பணத்தை எடுத்தார். “அட... ஆமா சார்.... ஐநூறு ருபாய்த்தாள்தான் தந்துருக்கீங்க..” என்று கொடுத்தார்.

வாங்கிக் கொண்ட கேஷியர், அப்பாடா என்று நெஞ்சில் கையை வைத்து நிம்மதியாய் சிரித்தார். “ரொம்ப தேங்க்ஸ் சார்...” என்று இவரது கையைப் பிடித்துக் கொண்டார். கூடவந்தவர்களும் முகம் ம்லர்ந்து நின்றார்கள்.

“ஒங்களமாதிரி நல்லவங்க இருக்குறதாலத்தான் எதோ கொஞ்சத்துக்கு கொஞ்சம் மழை பெய்யுது சார்...” என்றார் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு.

“இதுல என்ன சார் இருக்கு. மனுசங்கதான நாம எல்லாம்.  ஏ...பையா! சார்மாருங்களுக்கு மூனு டீ சொல்லு...”

 

*

20 Comments

Add your comment

  1. J
    May 30, 2009 9:38 AM

    ம் மனுசங்க தான நாம எல்லாம்
    வாய்ப்புகள் வருகிற வரைக்கும்
    வாய்ப்புகள் எப்படி பயன்படுத்துறது
    பொருத்து தான் மனிதன் தெய்வமாகவோ,ஒரு தலைவனாக, (அ)அயோக்கியனாக மாற்றுகிறது

  2. ஆதவா
    May 30, 2009 9:47 AM

    ஏனோ, என்னை இக்கதை கவரவில்லை (மன்னிக்கணும் சார்.) (மறந்தாப்படி சொந்தக்கதை சோகக் கதை சொல்லிட்டீங்களா??ஹிஹி)

    ஒருமுறை UTI (இப்போ Axis) ATMல் பணமெடுக்க சென்றிருந்தேன். ஐயாயிரம் ரூபாய் பேலன்ஸ் எப்போதும் இருக்கவேண்டும். ஒரு அவசரத் தேவைக்கு மொத்த பணமும் எடுத்தேன். ரிசிப்ட் வந்தது. மொத்த பேலன்ஸ் இரண்டாயிரத்தி ஐநூறு என்று.... விடுவேனா.... மீண்டும் பேலன்ஸ் செக் செய்து பார்த்தேன்.... ஆமாம். பணம் குறையவேயில்லை. திரும்பவும் இரண்டாயிரத்தி ஐநூறையும் எடுத்தேன்...

    மூன்றாவது மாதத்தில் வரும் ஸ்டேட்மெண்ட் எங்கள் வீடுதேடி வந்தது... பேலன்ஸ் -2500 ல் இருப்பதாகவும், அதற்கு பெனால்டி 600 சில்லறையும்.....(எடுத்த பணத்தில் nVidea GeForce Video கார்ட் வாங்கினேன்... இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது!! ஹிஹி...)

  3. அருமை.

    சத்தியமும் நேர்மையும் இன்றும் நம் மக்களிடம் உள்ளது. என்றும் இருக்கும்.


    மடியில் (மனத்தில்) கனத்தை வைத்து கொண்டு அல்லல் படுவதை விட கனத்தை இறக்கி விட்டு சந்தோஷமாக இருக்கலாம்.

    கதையில் வரும் அந்த நபருக்கே, நான்காயிரம் ரூபாய் டோண்டரவைத்தான் கொடுத்ததே தவிர மன மகிழ்ச்சியை தர வில்லை.


    குப்பன்_யாஹூ

  4. சந்தனமுல்லை
    May 30, 2009 10:43 AM

    சாதாரண மனிதனின் உள்மனப்போராட்டாங்களை நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! அனைவருக்கும் உள்ளே ஒரு Mr.Right இருப்பதையும், அவரை எல்லா நேரங்களிலும் நிராகரித்துவிட முடியாதுதானே! :-)

  5. Thirumal
    May 30, 2009 11:16 AM

    மிக அழகான கதை..

    பேங்க்லயே பணத்த எண்ணிப் பார்த்துத் 5000ஐ தெரிந்தேதான் கொண்டுவந்திருப்பார் என்பது தெரிந்தும் மனப்பூர்வமாய் நன்றி சொல்லிய கேஷியரும்,

    முகம் மலர்ந்த, கூட வந்த அம்மூவரும்,

    கதையின் தலப்பைக் கடைசியில் சொல்கின்ற அந்த Mr.டோக்கன்-8 ம்
    சிறப்பான படைப்பு..

    வாழ்த்துக்கள்.

  6. Deepa
    May 30, 2009 11:18 AM

    கதையும் அதை விட அதன் தலைப்பும் வெகு சிறப்பு.

    //முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் “இல்லையே, ஆயிரம் ருபாய் தானே தந்தீர்கள்” என்று சொல்வதாய் ஒத்திகைப் பார்த்துக் கொண்டார்.//
    படு யதார்த்தம்!

    :-)

  7. nandhan
    May 30, 2009 11:37 AM

    ஓரு வேலை காளிமுத்து தொல்லை இல்லை என்றால் வைங்கியிளேயே கொடுத்திருப்பாரோ.

  8. இந்த கதையை படித்ததும் எனக்கு எஸ்.ராவின் 'எல்லா நாட்களையும் போல.' என்ற கதைதான் நியாவகத்துக்கு வந்தது. அதில் வங்கியில் திருட்டுக் கொடுத்தவன் ஒருவனின் மனநிலையையும் அவன் மீதான மற்றவர்களின் பார்வை என விவரித்து இருப்பார். அது போலவே இக்கதையும் வங்கிக் காசாலர் அதிகம் கொடுத்தப் பணத்தை உடணே திருப்பிக் கொடுக்க மனமில்லாது தனக்குண்டான நெருக்கடியில் அது தனக்கு உதவுவதாக நினைத்தும் அதே வேலையில் மனிதாபிமானத்துடன் மனதுக்குள் புளுங்குவதும் யதார்த்த மனிதனின் நிலையே.

    அதை நன்று காட்சிப்படுத்து இருக்கீங்க. கதை நல்லா இருக்கு சார்.

  9. nice!

  10. வெங்கிராஜா
    May 30, 2009 6:09 PM

    கெஸ் செய்ய முடிந்த்ததாலோ என்னவோ அவ்வளவு கவரவில்லை. தருமம் தான் வெல்லும் என்பது முன்னமே தெரிந்துவிட்டது!

    அப்படியே டெம்ப்ளேட்டில் மேலே இருக்கும் இணைப்புகளை தமிழிலும், எடிட் லிங்க் என்று இருக்கும் இடத்தில் வேறேதேனும் இணைப்புகளை தரவும் அன்புடன் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன் ( அதான் சார்.. எடிட் எச்.டி.எம்.எல்--எக்ஸ்பேண்ட் விட்ஜட் டெம்ப்ளேட்ஸ்--... தெரியுமே உங்களுக்கு! )

  11. Rajesh Thulasi
    May 31, 2009 8:29 AM

    nice sir.. nalla irundhuchi..

  12. இய‌ற்கை
    May 31, 2009 8:53 AM

    nalla irukkunga....

  13. cheena (சீனா)
    June 1, 2009 7:58 AM

    அன்பின் மாதவராஜ்

    இயல்பு -- யதார்த்தம் - பெரும்பானமையினர் அல்லாடுவதும் - இறுதியில் நல்ல முடிவெடுப்பதும் நடுத்தர மக்களின் இயல்பு. இது மாதிரி வங்கியில் உண்மையில் நடந்த சம்பவங்கள் அதிகம்.

    நல்வாழ்த்துகள்

  14. Anonymous
    June 1, 2009 9:31 AM

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.

    அன்பார்ந்த தோழரே,
    தீராத பக்கங்கள் மிக அருமையாக இருக்கிறது, டோக்கடன் எண் 8-ஐப் படித்ததும் தோழர் பிரேம்சந்த் எழுதிய ‘நகைப்பெட்டி’ (jewel box) கதைதான் நினைவுக்கு வந்தது, அந்தக் கதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    அந்தக் கதையில் ட்யூஷன் எடுக்கும் ஒரு படித்த இளைஞன் அந்த வீட்டிலிருந்த நகைப்பெட்டியைக் களவாடிவிடுவான். ஆனால் அந்த வீட்டின் மாந்தர்கள் அனைவரும் அவன்மீது சிறிதுகூட சந்தேகப்பட மாட்டார்கள். அதுமட்டுமல்ல பின்னர் அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்த சமயத்தில் பிணையாளர் ஒருவர் தேவைப்பட்டது, அந்த வீட்டின் மாந்தரே ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி, பிணையாளராக மாறுவார்.
    ‘நகைப்பெட்டியை’ களவாடியவன் நெஞ்சம் பதைப்பதுதான் கதையின் சாரம். கடைசியில் நகைப்பெட்டியை அப்படியே திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவான்.
    மனிதர்களைப் பதப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், கதைகள் அரிதாகி வருவதால்தான், அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அனைத்துத் துறைகளிலும் கிரிமினல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணமாகும்.
    வங்கிகளுக்கு வருவோரில் பெரும்பான்மையோர் தாங்கள் பெற வேண்டிய பணத்தை விட அதிகமாக, காசாளரிடமிருந்து பெற்றுவிட்டால். உடனேயே திருப்பித் தந்துவிடுவார்கள். இதுவே என் அனுபவம். ஆனால் அதற்காக எத்தனை வங்கி ஊழியர்கள் அதற்கு நன்றி பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள்தான் அதனைச் சொல்லவேண்டும்.
    தோழமையுடன்
    ச.வீரமணி

  15. ச. வீரமணி:
    June 1, 2009 9:35 AM

    இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.

    அன்பார்ந்த தோழரே,
    தீராத பக்கங்கள் மிக அருமையாக இருக்கிறது, டோக்கடன் எண் 8-ஐப் படித்ததும் தோழர் பிரேம்சந்த் எழுதிய ‘நகைப்பெட்டி’ (jewel box) கதைதான் நினைவுக்கு வந்தது, அந்தக் கதை படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    அந்தக் கதையில் ட்யூஷன் எடுக்கும் ஒரு படித்த இளைஞன் அந்த வீட்டிலிருந்த நகைப்பெட்டியைக் களவாடிவிடுவான். ஆனால் அந்த வீட்டின் மாந்தர்கள் அனைவரும் அவன்மீது சிறிதுகூட சந்தேகப்பட மாட்டார்கள். அதுமட்டுமல்ல பின்னர் அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்த சமயத்தில் பிணையாளர் ஒருவர் தேவைப்பட்டது, அந்த வீட்டின் மாந்தரே ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டி, பிணையாளராக மாறுவார்.
    ‘நகைப்பெட்டியை’ களவாடியவன் நெஞ்சம் பதைப்பதுதான் கதையின் சாரம். கடைசியில் நகைப்பெட்டியை அப்படியே திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடுவான்.
    மனிதர்களைப் பதப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள், கதைகள் அரிதாகி வருவதால்தான், அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அனைத்துத் துறைகளிலும் கிரிமினல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணமாகும்.
    வங்கிகளுக்கு வருவோரில் பெரும்பான்மையோர் தாங்கள் பெற வேண்டிய பணத்தை விட அதிகமாக, காசாளரிடமிருந்து பெற்றுவிட்டால். உடனேயே திருப்பித் தந்துவிடுவார்கள். இதுவே என் அனுபவம். ஆனால் அதற்காக எத்தனை வங்கி ஊழியர்கள் அதற்கு நன்றி பாராட்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தாங்கள்தான் அதனைச் சொல்லவேண்டும்.
    தோழமையுடன்
    ச.வீரமணி

  16. மாதவராஜ்
    June 1, 2009 9:13 PM

    ஜே!
    சூழலை மிஞ்சும்போது மனிதன் மகத்தானவனாகிறான். மனிதம் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் வருகிறது.... இல்லையா?

    ஆதவா!
    நன்று. கவர வேண்டும் என்று ஆசைப்படவுமில்லை. சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன். ம்ம்..சொந்தக்கதைதான். 4000ருபாய் திரும்பக் கிடைக்கவில்லை.

    சந்தனமுல்லை!
    ஆமாம். எல்லாருக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான்!


    குப்பன் யாஹூ!
    மனிதனாய் இருப்பதால்தான் அந்தத் தொந்தரவும். இல்லையென்றால்... அவன் பாட்டுக்கு விசில்கூட அடிக்கலாம்தானே!


    திருமால்!
    நன்றி.

  17. மாதவராஜ்
    June 1, 2009 9:17 PM

    தீபா!
    கதை எழுத ஆரம்பித்திருப்பதால், இந்த நுட்பங்களையெல்லாம் ரசிக்க முடிகிறது என நினைக்கிறேன்.

    நந்தன்!
    காளிமுத்து இல்லையென்றால் ஒரு சொரிமுத்து. பிரச்சினையா மனுஷனுக்கு இங்கு இல்லை? பணமா இங்கு மனிதனுக்கு தேவையில்லாமல் இருக்கிறது!


    ஆ.முத்துராமலிங்கம்!
    நன்றி. எஸ்.ராவின் அந்தக் கதை நான் படிக்கலையே.... படிக்கணும்.



    மங்களூர் சிவா!
    நன்றி.

  18. மாதவராஜ்
    June 1, 2009 9:21 PM

    வெங்கிராஜா!
    நன்றி. எப்படி இணைப்புகளைத் தரணும்?

    ராஜேஷ் துளசி!
    நன்றி.

    இயற்கை!
    நன்றி.


    சீனா!
    நன்றி. நீங்களும் இதுபோன்ற நிகழ்வுகளை சந்தித்திருக்கக் கூடும் அல்லவா!


    வீரமணி!
    பிரேம்சந்த் கதையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.
    வங்கிக் காசாளர்களும் மனிதர்கள்தானே....

  19. raki
    June 6, 2009 5:06 PM

    அன்புள்ள நண்பருக்கு

    வணக்கம்

    இந்த கதை என்னை 30 வருஷங்களுக்கு பிந்தைய நினைவுகளுக்கு இழுத்து சென்று விட்டது. நான் பிறந்த ஊர் ஒரு குக்கிராமம் போக்குவரத்து கூட கிடையாது அந்த நாட்களில். என் தந்தையார் அவர்கள் மணிலா விளைச்சலை 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விருத்தாசலம் நகரில் அமைந்துள்ள விற்பனை கூடத்தில் தான் விற்க வேண்டும். அவர் சர்க்கரை நோயால் அவதி படுபவர் மேலும் எவ்வளவு நேரமானுலும் வீடு திரும்பிய பிறகு இரவில் அரை மணி நேரமாவது ஆசனங்கள் செய்த பிறகு குளித்து விட்டு உணவு அருந்துவது வழக்கம். அது போல தினமும் அன்றைய வரவு செலவு கணக்குகளை எழுது விட்டு தான் ஆசனங்களை செய்வார்.

    ஒரு முறை மணிலா விற்ற பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்ப வந்து கணக்கு பார்க்கும் பொழுது ஒரு ஆயிரம் அதிகமாக இருப்பதை அறிந்து ( காலை நான்கு மணியளவில் மாட்டு வண்டியில் விளைச்சலை ஏற்றிக்கொண்டு சென்றால் தான் பத்து மணி அளவில் விற்பனை கூடத்தில் விற்க முடியும் - பணம் பட்டு வாட செய்ய மாலை அல்லது இருட்டிவிடும்) அதை திருப்பி கொடுப்பதற்காக மீண்டும் சைக்கிள் எடுத்து கொண்டு விற்பனை கூடத்துக்கு சென்றார். அங்கே ஒரே பதட்ட நிலையில் இருந்த காசாளர் ஆனா திரு ஆளவந்தார் நாய்டு அவர்களிடம் நிலைமையை விளக்கி திரும்ப கொடுத்ததும் அவர் அலுவலகம் என்றும் பாராமல் என்னுடைய தந்தையார் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அவர் எவ்வளவு மன்றாடியும் அலுவலகத்தில் அனைவரும் அவர் அந்த பணத்தை களவாடிய தாகவே பழி சுமத்தியதாகவும் அவர் அவமானம் தாங்காமல் மறுநாள் தற்கொலை உத்தேசித்து இருந்ததாகவும் கதறியபடி சொன்னாரம்

    நல் நினைவுகளை கிளர்த்து எழுப்பியமைக்கு நன்றி

    ர ராதாகிருஷ்ணன்
    ஹைதராபாத்

  20. balaravisankar
    June 22, 2009 6:42 PM

    Ennul oru pazhaya ninaivai thoondivittadu. Nandri