வந்தான், இருந்தான், சென்றான்

வந்தான், இருந்தான், சென்றான்

விடிகாலையில் அம்மா கோலம் போட்டுக் கொண்டு இருக்கும்போது மகன் வந்தான். இன்னும் ஆறு நாள், ஐந்து நாள் என ஒவ்வொரு விடியலையும் பத்துநாளாய் கழித்துக்கொண்டு வந்தவர்களுக்கு தலைகால் புரியவில்லை. ஒடிப்போய் உச்சி முகர்ந்தார்கள். காபி போட்டுக் கொண்டு வரும் முன்னால் பேண்ட் சட்டையைக்கூட கழற்றாமல் அப்படியேத் தூங்கிப் போனான். எழுப்ப மனம் வராமல் அவனையேப் பார்த்திருந்துவிட்டு, அவனுக்குப் பிடித்த பலகாரங்கள் செய்ய சமையலறை சென்றார்கள். பத்து வரை கூடப் படித்த உள்ளூர் நண்பர்கள் பார்க்க வந்தார்கள். தூங்குவது அறிந்து பிறகு வருவதாய்ச் சொல்லிச் சென்றார்கள்.

மதியம் விழித்தவன் குளித்து, சாப்பிட்டுத் திரும்பவும் தூங்கினான். ஆசையாய் செய்து வைத்த அதிரசத்தோடும், காபியோடும் அம்மா சாயங்காலம் எழுப்பினார்கள். நண்பர்கள் வந்தார்கள். செல்போனில் சிரித்துக்கொண்டே இடையிடையே அவர்களிடமும் பேசினான். அந்நியமாகிப் புறப்பட்டார்கள். பிறகு அவன் லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டான். அம்மா பத்து தடவை கூப்பிட்ட பிறகு சாப்பிட்டான். செல்போனில் பேசினான். லேப்டாப்பில் உட்கார்ந்தான். அவ்வப்போது அம்மாவும் எழுந்து “ஏம்மா படு” என்றார்கள். “இப்படி இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்றார்கள். விடிகாலையில் கோழி கூவும்போது லேப்டாப் அருகிலேயே படுத்துக்கொண்டான்.

திரும்பவும் மதியம்தான் எழுந்தான். சாப்பிட்டான். தூங்கினான். மாலை வந்தது. எழுந்தான். செல்போனில் பேசினான். லேப்டாப்பில் உட்கார்ந்தான். இரவு ஒன்பது மணி  பெங்களூர் பஸ்ஸிற்கு புறப்பட்டான். இனி அவன் வர ஆறு மாதமாகுமோ, ஒரு வருஷமாகுமோ. தெருக்கோடி திரும்பும் வரை பார்த்திருந்த அம்மா வீட்டிற்குள் நுழைந்து “ஏம்புள்ள எங்கிருந்தாலும் நல்லாயிருக்கணும் சாமி” என்று திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக் கொண்டாள். கண்ணீராய் வந்தது.

மணமகள்

பெற்ற கடன் முடிந்தது என்றாலும் அம்மாவுக்கு அடக்க முடியவில்லை. இந்த வீட்டிற்குள்ளேயே வளைய வளைய வந்த மகள் இன்று இன்னொரு வீட்டிற்கு செல்கிறாள். புறப்படும் அந்த வினாடியிலும் அவள் முகத்தில் எந்த வாட்டமும் இல்லை. அம்மாவுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. “பை.. மா..” சொல்லி காரில் ஏறிக்கொண்டு கையசைத்துப் போய் விட்டாள். “என்னங்க...” என்று கணவனின் தோளைப் பிடித்து கதறினார்கள். அவரும் அம்மாவை ஆதரவாய்ப்  பற்றி உள்ளே அழைத்துச் சென்றார். வீடு முழுவதும் வெறுமையாய் இருந்தது. தேம்பிக்கொண்டே இருந்தார்கள். செல்போன் அடித்தது. எடுத்தார்கள். ‘என்னம்மா அழுறீங்களா....”  மகளின் குரல் கேட்டது.  “இல்லம்மா” என அம்மா சிரிக்க ஆரம்பித்தார்கள்.

*

கருத்துகள்

13 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பின் நண்பருக்கு,

    'வந்தான், இருந்தான், சென்றான்' - வீட்டை விட்டு விலகி, தொலைதூரம் ஏகித் தொழில்புரியும் எல்லா மகன்களிலும் கதைதான். யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறீர்கள். என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியுமாக இருக்கிறது. பாராட்டுக்கள் நண்பரே !

    மணமகள் கதையும் சிறப்பு.
    இதே கருவில் இலங்கையில் முன்னர் ஒரு செல்போன் விளம்பரம் வந்தது. நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதில் மணமகன் வீடு செல்லும் மகள் அம்மாவுக்கென புது செல்போன் ஒன்றினை வாங்கி அவளறையில் ஒளித்து வைத்துவிட்டுக் காரில் ஏறிப் போகிறாள். பாதி வழியில் அம்மாவுடன் கதைக்கிறாள். அப் பெண்களின் கதை நீள்கிறது இப்படியாக...

    பதிலளிநீக்கு
  2. நகர்ப்புற கலாச்சாரமும், பொருளியல் சார்ந்த வாழ்வும் பாசத்தையும் அன்பையும் விழுங்குகின்றன.

    நாளை நம் பிள்ளைகள் nammidam pesaamal laaptop, valipadhivu orkut, yahoo என்று poluthai kazikkaiyil நாம் unarvom valiyai.

    pahivu valakkam போல miga arumai.

    kuppan_yahoo

    பதிலளிநீக்கு
  3. ஹைய்யோ..நீங்க சொல்றது எல்லோருக்கும் பொருந்தும் போல இருக்கே! :-) இனிமேவாவது மனிதர்களின் முகம் பார்த்து பேசறேன்!! சிந்தனையைத் நல்ல இடுகை!! அப்புறம் மணமகள் ஏதோ ஒரு விளம்பரத்தை பார்த்த மாதிரி இருக்கு! :-)

    பதிலளிநீக்கு
  4. இரண்டு கதைகளுமே என்னை மிகவும் பாதித்தது,
    முதல் கதையில் மனிதன் எவ்வளவு இயந்திரத்தனமாக மாறிவிட்டான் என்பதும் உணர்வுகள் எப்படி அவ்வளவு எளிதில் மழுங்கி விடுகிறது என்பதையும் அழகாக சொல்லியிருந்தீர்கள்

    மணமகள்

    மனம் உணர்வுக் குவியலாய் இருந்தது, இதை வாசித்து முடிக்கையில்.

    பெற்றோர் பிள்ளைகள் உறவுகளை இரண்டிலுமே அழகாகச் சொல்லியிருப்பது மிகவும் பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. @ரிஷான் ஷெரிப்

    அந்த ஏர்டெல் விளம்பரம் இந்தியாவிலும் ரொம்ப நாள் வந்ததே.


    ரெண்டு கதையாதான் நிறைய பேர் படிச்சிருக்காங்க. அப்ப நான் படிச்சி புரிஞ்சிகிட்டதும் ஓக்கே!

    பதிலளிநீக்கு
  6. இத்தனை சுறுக்கமான எழுத்தில், வாழ்வின் முறன்களை ஏக்கங்களை அன்னியப் படுதலை இயந்திரத்தனத்தை... இன்னும் இன்னும் எத்தனை சொல்லுகின்றது.

    இரண்டுமே யதார்த்த நிலை!! (தற்காலத்தின்)

    பதிலளிநீக்கு
  7. மங்களூர் சிவா!
    ரிஷான் ஷெரிப்!
    குப்பன் யாஹூ!
    சந்தனமுல்லை!
    யாத்ரா!
    முத்துராமலிங்கம்!
    அனைவருக்கும் நன்றி.
    இரண்டாவது சொற்சித்திரம் போல விளம்பரம் வந்திருக்கிறதோ.....

    பதிலளிநீக்கு
  8. மங்களூர் சிவா!
    இரண்டும் ஒரே கதையல்லதான்...
    ஆனாலும் ஒரே கதைதான்....

    பதிலளிநீக்கு
  9. அந்த விளம்பரம் குறித்து அம்மு சொன்னதும் ஞாபகம் வந்தது. ஆனால், அந்த மணமகள் அழுதுகொண்டுதான் காரில் செல்வாள். இங்கு மணமகள் அழவில்லை. அதுதான் சொல்ல வந்த முக்கிய விஷயமும் கூட.

    பதிலளிநீக்கு
  10. எங்க வீட்டிலும் இதே நிலைமைதான் ஆனால் அவனுக்கு இதை படித்து புரிய வைக்க தமிழ் தெரியாது ....

    நீங்கள் எழுதியிருப்பது கதையல்ல நிஜம் ......

    பதிலளிநீக்கு
  11. //
    புறப்படும் அந்த வினாடியிலும் அவள் முகத்தில் எந்த வாட்டமும் இல்லை.
    //
    பிறந்த வீட்டிலிருந்த புகுந்த வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போக வேண்டியது தானே? பார்க்க விரும்பும் போது, அம்மா, அப்பாவை சந்திச்சு பேசிக்கிட்டாப் போச்சு.

    இதுக்கு ஏன் அழுகையும், கதறலும்?!?

    பதிலளிநீக்கு
  12. :-) முதல் பகுதி அற்புதம். இரண்டாவது அந்த அளவு மனதைத் தொடவில்லை. ஒரு வேளை நான் திருமணமாகி ரொம்ப தூரம் போய் அம்மாவை அழ வைக்கவில்லை என்ற குறை காரணமாக இருக்கலாம்!
    :-)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!