ஒழுக்கத்தின் பலிபீடங்கள்



வன் தலைமையலுவலகத்தில் வேலை பார்த்து வரும் தற்காலிக கடைநில ஊழியன். இரண்டு வாரம் வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி நிர்வாகம் அவ்னை வீட்டுக்கு அனுப்பி விட்டது. விஷயத்தை அறிந்தவுடன் பொதுமேலாளருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எங்கள் சங்கத்தின் செயற்குழு முடிவு செய்தது.

காரணத்தை கேள்விப்பட்டதும் அந்தக் கடைநிலை ஊழியன் மீது முதலில் கோபம்தான் வந்தது. ஸ்டேஷனரி டிபார்ட்மெண்டிலிருந்து கம்ப்யூட்டர் பிரிண்டிங் பேப்பர் பண்டல் இரண்டை திருடிவிட்டானாம். அவனிடம் நாங்கள் அதட்டிக் கேட்ட போது ஒத்துக் கொண்டான். வங்கியின் பேர் இருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விட்டு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்யும் நோட்டுப் புத்தகங்களாக பைண்டிங் செய்து கொடுத்திருக்கிறான்.

எந்த முகத்தோடு பொது மேலாளரிடம் போய் பேசுவது என்று தெரியவில்லை. ஒழுக்கம் கெட்டுப் போவதற்கும், ஊழியர்கள் தரம் தாழ்ந்து போவதற்கும் தொழிற்சங்கங்கள் இது போன்ற காரியங்களை ஆதரித்து கொடி பிடிப்பதுதான் காரணம் என்று எல்லா நிர்வாகங்களும் எல்லாக் காலங்களிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்காக முயற்சிகள் எடுப்பதால் சங்கத்திற்கும் அவப்பெயர் வருகிறது என்று ஊழியர்கள் தரப்பிலும் நேர்மையானவர்கள் விமர்சனம் வைக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அடியில் அவனுடைய் முகம் பரிதாபமாக தெரிகிறது. அது மெய்யப்பனின் முகமாக மாறி என்னமோ செய்கிறது.

மெய்யப்பனும் இந்த வங்கியில் கடைநிலை ஊழியராக வேலை பார்த்து வந்தவர்தான். ஆனால் பணிநிரந்தரம் செய்யப்பட்டவர். கடைநிலை ஊழியர் போல தெரிய மாட்டார். எப்போதும் இன் பண்ணி, ஷூ போட்டு படு பந்தாவாக இருப்பார். இதே மிடுக்கோடு கல்யாணமும் செய்து அவரது சொந்த ஊர்ப்பக்கம் மாறுதல் வாங்கிச் சென்று விட்டார். ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சங்க அலுவலகத்தின் வாசலில் வந்து நின்றார். கையில் சஸ்பென்ஷன் ஆர்டர். ஒரு அறுநூறு ருபாய்க்காக நகைக்கடன் கார்டில் மேனேஜர் மாதிரி கையெழுத்துப் போட்டிருப்பதாக குற்றப்பத்திரிகை. வாழ்வின் பயமில்லாமல் சிரித்துக் கொள்ள அவரால் முடிந்தது. சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு "கேஸ் முடிய எவ்வளவு நாளாகும்" என கேட்டார்.

அப்படி இப்படி என்று எல்லாம் முடிய இரண்டு வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. விசாரணைக் காலங்களிலும் திடமாகவே இருந்தார். சவரம் செய்து திருநீறு பூசிய கோலத்தில் திவ்யமாகவே இருந்தார். கொஞ்ச நாளில் சிகரெட் பிடிப்பதை விட்டிருந்தார். இரண்டாவது குழந்தை பிறந்ததை முன்னிட்டு என்று அவரால் சொல்லிக் கொள்ள முடிந்தது. சாட்சிகள் ஒன்றும் அவருக்கு எதிராக இல்லை. மேனேஜர் போல அவர் போட்டிருந்த கையெழுத்தை யார் வேண்டுமானாலும் போட்டிருக்கலாம். வழக்கு ஜோடிக்கப்பட்டிருந்த முறையிலும் கோளாறுகள் இருந்தன. நேரடியாக குற்றம் நிருபீக்கப்படவில்லை. நிர்வாகம் அதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. மிகத் தெளிவாக வங்கியிலிருந்து நீக்குவதாக ஒரு பக்கத் தாளில் சொல்லிவிட்டது.

"அடுத்து என்ன செய்யலாம்" என நடுக்கத்தோடு கேட்டார். அன்றுதான் மெய்யப்பன் முகமே கலைந்து போனது. "இல்லை...இந்த நிர்வாகங்கள் இப்படித்தான். நாம் கோர்ட்டில் கேஸ் போட்டு ஜெயிக்கலாம்" என்றெல்லாம் நம்பிக்கையளிக்கப்பட்டது. அவர் முன் நின்றிருந்தவர்களையெல்லாம் பரிதாபமாக பார்த்தார். வழக்குக்குத் தேவையான பேப்பர்களை தயார் செய்யும் போதும், வக்கீலை சென்னை சென்று பார்க்கும் போதும், இரண்டு தடவை மெய்யப்பனை பார்க்க முடிந்தது. இயல்பாகக் கூட குடும்பம், குழந்தைகளைப் பற்றி விசாரிக்க முடியாத அளவுக்கு மௌனம் ஒன்று தயங்க வைக்கும். மூத்தப் பையன் பள்ளிக்கூடத்திற்கு கொண்டு போக பை ஒன்றை பர்மா பஜாரில் கடுமையாக பேரம் பேசி வாங்கி, பாசத்தோடு நெஞ்சில் அணைத்து வைத்துக் கொண்டார். அன்று வழியனுப்பும் போது அவரை பஸ்ஸில்
பார்த்ததுதான்.

இன்னொரு கேஸ் சம்பந்தமாக வக்கீலைப் பார்க்கச் சென்ற போது மெய்யப்பன வரவில்லையென்றும், வழக்கை நடத்த அவர் கையெழுத்து போட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவரைப் பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் ஊரைக் காலி செய்து போய்விட்டதாக சொன்னார்கள். தற்போதைய விலாசமும் தெரியவில்லை.

அதற்குப் பிறகு அவரைப் பார்த்தது ஒரு வருடத்திற்கு முன்புதான். பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டில் தெருவில் நின்று கூவிக் கொண்டிருந்தார். "எதையெடுத்தாலும் ரெண்டு ருபா....ரெண்டு ருபா.."

அதிர்ச்சியாய் இருந்தது. அருகில் சென்று தோளில் கைவைத்ததும் ஒரு கணம் உற்றுப்பார்த்தார். சந்தோஷத்தை மீறிய அவமானம் அவர் முகத்தில் தெரிந்தது. சட்டென சமாளித்தபடி, "ஏ..வாப்பா..." என்றார். பக்கத்துக் கடையில் டீ சாப்பிடச் சொன்னார். சாப்பிட்டேன். பீடி பற்றவைத்துக் கொண்டார். "பையன் என்ன படிக்கிறான்" கேட்ட போது "அஞ்சு" என்றார். வியாபாரத்தைக் கவனிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவருக்குள் ஒடிக்கொண்டிருந்தது. கண்கள் கலங்குவதை அப்படியொரு பாவனையில் மறைக்க முயற்சித்தார். 'வழக்கை நடத்தியிருக்கலாம்' என்று மெல்லச் சொன்ன போது "ஆமாம்...நடத்தி..." என்று அழுதார். "இல்ல கேஸ் நமக்குச் சாதகமாகவும் வாய்ப்பிருக்கு" சொன்னவுடன் லேசாய் சிரித்தார். "அவங்க என்னத் தண்டிச்சு ஒழுக்கத்தக் காப்பாத்திக்கிடட்டுமப்பா. விடு" என்றார். அதற்கு மேல் அவரோடு பேச முடியவில்லை.

அந்த வார்த்தைகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அமைப்பு ஒழுக்கமாக தன்னை காட்டிக் கொள்வதற்கு ஒரு பலிபீடம் வைத்திருக்கிறது. அதில் மெய்யப்பன்களின் தலைகளே உருளுகின்றன. ஒழுக்கத்தின் காவலர்கள் அந்தத் தலைகளை கோர்த்து மாலையாக்கி போட்டுக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். அமைப்பையும், ஒழுக்கத்தையும் காலில் போட்டு மிதிப்பவர்கள் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் காமிராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு இங்கே மகிமை இருக்கிறது. நாட்டையே கபளிகரம் செய்தாலும் மரியாதை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டையும் தாண்டிய செல்வாக்கு இருக்கிறது. நடத்தை விதிகள் என்பது இங்கே கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசன், தெய்வம், நீதி எல்லாம் சாமானியர்கள் அஞ்சுவதற்காகவும், பூஜிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

சாதாரண, எளிய மனிதர்கள் தவறு செய்யவும், ஒழுக்கம் தவறவும் இந்த வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறது. கஷ்டங்ளைக் கொடுக்கிறது. ஆனாலும் அரிச்சந்திரனாய் இருக்க வேண்டும் என போதிக்கிறது. பலியிடப்பட்ட மெய்யப்பன்களை சாட்சியாக வைத்து ஒழுக்கத்தை பறைசாற்றிக் கொள்கிறது. ஒழுக்கம் கெட்டவர்களே ஒழுக்கத்தைப் பற்றி சத்தம் போட்டு பேசுகிறார்கள். ஒழுக்கமும் எல்லோருக்கும் சமமானதுதான் என்னும் பிரக்ஞையற்ற மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒழுக்கம் என்பது கீழிலிருந்து மேல் செல்வது அல்ல. மேலிருந்துதான் கீழே வரவேண்டும்.

இந்த கம்ப்யூட்டர் பேப்பர்களை இந்தக் கடைநிலை ஊழியர்தான் எடுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியே எடுத்திருந்தாலும், அந்த அளவுக்கு அவனுக்கு என்ன நெருக்கடி என அவன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிற மனது யாரிடம் இருக்கிறது? இரக்கமும், கருணையும் ஒழுக்கமற்றவர்களுக்கே இல்லாமல் போகும் போது நமக்கென்ன...?

எந்த தயக்கமுமில்லாமல் பொது மேலாளரின் அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்த நுழைந்தோம்.

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //ஒழுக்கத்தின் காவலர்கள் அந்தத் தலைகளை கோர்த்து மாலையாக்கி போட்டுக்கொண்டு உபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். அமைப்பையும், ஒழுக்கத்தையும் காலில் போட்டு மிதிப்பவர்கள் எந்த கூச்ச நாச்சமுமில்லாமல் காமிராக்களுக்கு போஸ் கொடுக்கிறார்கள். சிரிக்கிறார்கள். கோடி கோடியாய் கொள்ளையடித்தாலும் அவர்களுக்கு இங்கே மகிமை இருக்கிறது. நாட்டையே கபளிகரம் செய்தாலும் மரியாதை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டையும் தாண்டிய செல்வாக்கு இருக்கிறது. நடத்தை விதிகள் என்பது இங்கே கீழே உள்ளவர்களுக்காக மட்டுமே விதிக்கப்பட்டிருக்கின்றன. அரசன், தெய்வம், நீதி எல்லாம் சாமானியர்கள் அஞ்சுவதற்காகவும், பூஜிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.//

    'நச்' னு சொல்லியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  2. எனக்கு கூட தோன்றும். விஜிலென்சில் சாதாரண் ஊழியர்களை பிடிக்கிறார்கள். ஆனால் பெரிய அதிகாரிகள் அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்பவர்கள் மாட்டுவதில்லை.
    சான்யா

    பதிலளிநீக்கு
  3. சாதாரண, எளிய மனிதர்கள் தவறு செய்யவும், ஒழுக்கம் தவறவும் இந்த வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறது. கஷ்டங்ளைக் கொடுக்கிறது. ஆனாலும் அரிச்சந்திரனாய் இருக்க வேண்டும் என போதிக்கிறது. பலியிடப்பட்ட மெய்யப்பன்களை சாட்சியாக வைத்து ஒழுக்கத்தை பறைசாற்றிக் கொள்கிறது. ஒழுக்கம் கெட்டவர்களே ஒழுக்கத்தைப் பற்றி சத்தம் போட்டு பேசுகிறார்கள். ஒழுக்கமும் எல்லோருக்கும் சமமானதுதான் என்னும் பிரக்ஞையற்ற மனிதர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒழுக்கம் என்பது கீழிலிருந்து மேல் செல்வது அல்ல. மேலிருந்துதான் கீழே வரவேண்டும்.


    நிதர்சனங்கள் எப்போதுமே எளிய மனிதர்களை தான் தண்டிக்கிறது சட்டங்கள்.

    பதிலளிநீக்கு
  4. பழமொழி ஒன்னு நினைவுக்கு வருது.

    'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி'

    பதிலளிநீக்கு
  5. சின்ன திருட்டுக்கள் மட்டுமே இங்கே தண்டனை பெறுகின்றன .பணமிருந்தால் பலமிருந்தால் எதுவும் இங்கு தவறில்லை .

    பதிலளிநீக்கு
  6. நிதர்சனங்கள் பளார்னு கன்னத்தில் அறைந்தது போல கூர்மையான வரிகள் ராஜ்.

    அறைக்குள் நிகழ்ந்த விவாதங்கள் அடுத்த பதிவுல வருமா?

    பதிலளிநீக்கு
  7. கடைநிலை ஊழியன் பலியாடு.

    சட்டம், கசையடி எல்லாம் எளிய மக்களின் மனதை முதுகை மட்டும் பதம் பார்க்கும். சட்டத்தின் ஓட்டைகள் கவனமாக விசிறியடிக்கப்படும் பணத்தினால் மறைக்கப்பட்டுவிடும்.

    லட்சங்கள், கோடிகள் கொள்ளையடித்தால் மரியாதை,

    மெய்யப்பன்கள் வாழும்வகை என்ன விதத்தில் சேர்த்தி.

    என்னவோ போங்க. இந்த மனதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது.

    பதிலளிநீக்கு
  8. துளசி கோபால்!

    உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. சான்யா!

    உண்மை.
    இதுதான் இந்த சமூக அமைப்பின் சாபக்கேடு.

    பதிலளிநீக்கு
  10. கென்!

    உங்கள் வருகைக்கு நன்றி.

    உங்கள் கருத்தோடு, கவிஞர் இக்பாலின் கவிதை வரிகளை
    இணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது.

    "எளிய ஊர்க்குருவிகள் ஒன்று சேர்ந்தால்
    ராஜாளியின் இறகு கூட மிஞ்சாது'

    பதிலளிநீக்கு
  11. அம்பி!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. மதுமிதா!

    எப்போதும் போல் இப்பவும் உங்கள் மனது வருத்தப்பட்டு இருக்கிறது.


    "இந்த வாழ்க்கைதான் நமக்கு பிரச்சினைகளைத் தருகிறது.
    இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை ஆராயச் செய்கிறது.
    இந்த வாழ்க்கைதான் அந்த வழிகளில் போராடச் செய்கிறது."
    புகழ்பெற்ற தாய் நாவலில் வரும் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  13. சிறிதாக முரண்படுகிறேன்.
    நீங்கள் சுட்டிகாட்டிய மனிதர்கள் விளிம்பு நிலையை சேர்ந்தவர்கள் அல்ல!
    இவர்கள் மிடில்கிளாஸ் தான்.
    இவர்களிடம் உதவிக்காக வரும் விளிம்புனிலை மனிதர்களிடம் இவர்கள் ஐம்பதுக்கும், நூறுக்கும் நடந்து கொள்ளும் விதத்தை எப்போது எழுதுவீர்கள்.

    ஆனால் ஒன்று மட்டும் சந்தோசம்,
    அதிகாரமையத்தை தாங்குவதை விட்டு இப்போது தான் இந்த சமூகம் நடுத்தரவர்க்கத்ற்க்கு குரல் கொடுக்கிறது. பார்ப்போம் விளிம்பு நிலை மனிதர்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. மாதவராஜ், ஒன்றிலிருந்து ஒன்றாக உங்கள் பதிவுக்குள் வந்து, நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துகள்!

    இந்த பதிவில் இருப்பது, உலகளாவிய பிரச்னை. இன்றைய பொருளாதாரச் சரிவில் அமெரிக்காவில், பாதிக்கப்படுவது கூலி/சிறு ஒப்பந்த வேலைக்காரர்கள்; பணி/பதவி இழந்தது நடுத்தர/மேல்நடுத்தர‌ வர்க்கத்தினர்; மில்லியன்கள் பெற்று கோல்டன் பாராசூட்டில் ஓய்வு பெறுவது சி.இ.ஓ.க்கள்....

    //இந்த வாழ்க்கைதான் அந்த வழிகளில் போராடச் செய்கிறது// ஆனால், மெய்யப்பன் போராட்டத்தை மாற்றிக் கொண்டு விட்டார், இல்லையா?

    பதிலளிநீக்கு
  15. HONEST for whom?
    Sincerity for whom?
    Duty for whom?
    -No body can frame a code of ethics to all till the different types of social methods and conditions prevailing here.-
    ---vimalavidua@gmial.com
    ---Namakkal
    ---9442634002

    பதிலளிநீக்கு
  16. சிறிய தண்டனைகளுக்கு ஒரு எச்சரிக்கை அல்லது அபராதம்
    விதித்து அத்துடன் விட்டுவிடலாம்.
    மேலாளர் கையெழுத்தினைப் போட்டது என்று வரும் போது
    நிரூபணம் தேவை.வெறும் சந்தேகம்
    போதாது.தொழிற்சங்கங்கள் ஊழியர்
    செய்யும் சிறு தவறுகளுக்கு பெரிய
    தண்டனைகள் கொடுக்கும் போது
    எதிர்க்கலாம், சிறு தண்டனைகள்
    என்றால் அது பொருத்தமானது
    என்றால் அத்துடன் விட்டுவிடக்
    கோரலாம்.எல்லாவற்றிற்கும்
    கோடியில் கொள்ளை அடிப்பவன்
    தப்பிக்கிறான், நூறு ரூபாய்
    கையாடல் செய்தவன் மாட்டுகிறான்
    என்று நியாயம் சொல்ல முடியாது.
    நடத்தை விதிகளை பிறர் மீறினால்
    மாட்டிக்கொள்வதில்லை நான் மீறினால் என்ன என்று அனைவரும் யோசித்து அவ்வாறே செய்தால் சமூகம் என்ன ஆகும். அப்புறம்
    எந்த ஒரு தெரு மின்விளக்கு கம்பத்திலும் மின் விளக்கு இருக்காது.
    அதிகார மேல்மட்டங்களிலும்
    ஒழுக்கம் பேணுபவர்கள்,லஞ்சம்
    வாங்காதவர்கள், பொது நலனுக்காக
    பணியாற்றுபவர்கள் இருக்கிறார்கள்
    என்பதை மறந்துவிடாதீர்கள்.
    நீதி என்பதில் கருணை தேவை.
    ஆனால் கருணை என்பது தவறுகளை
    நியாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது.
    பிழை செய்தவன் மன்னிப்புக் கோரலாம்,மன்னிக்கப்படலாம்.
    பிழை செய்ததில் என்ன தவறு
    என்று வாதிடக்கூடாது.

    பதிலளிநீக்கு
  17. As a trade unionist we have to fight for the right things ...no doubts..In the enquiries we have to defend the workers for right way like the lawyers..At the same time we have to educate honest way of life,customer service and work and then only we can conduct the struggle against the dishonest powerful mismanagement.
    ---Vimalavidya@gmail.com
    ---Namakkal---9442634002

    பதிலளிநீக்கு
  18. வாங்க வால்பையன்!

    நல்லாயிருக்கீங்களா?

    //நீங்கள் சுட்டிகாட்டிய மனிதர்கள் விளிம்பு நிலையை சேர்ந்தவர்கள் அல்ல!
    இவர்கள் மிடில்கிளாஸ் தான்.
    //

    உண்மைதான்.

    //இவர்களிடம் உதவிக்காக வரும் விளிம்புனிலை மனிதர்களிடம் இவர்கள் ஐம்பதுக்கும், நூறுக்கும் நடந்து கொள்ளும் விதத்தை எப்போது எழுதுவீர்கள்//

    மெய்யப்பன் கதை அதுதானே! அப்படி நடந்து கொள்பவர்தானே அவர் அல்லது அப்படிப்பட்டவர்களின் ரோல்மாடல்தானே அவர்.
    இங்கே பிரச்சினைகள் பெரும்பாலும் மிடில்கிளாஸிடம்தான் இருக்கின்றன. அவர்களே மனோபலமற்றவர்களாகவும், குழப்பவாதிகளாகவும், இந்த அமைப்பின் அழுகிப்போன கருத்துக்களை சுமந்து கொண்டு திரிபவர்களாகவும் இருக்கிறார்கள்.

    நீங்கள் எழுதியிருப்பதில், விளிம்புநிலை மனிதர்களிடமே ஐம்பதுக்கும், நூறுக்கும் நடந்து கொள்பவர்களிடம் எந்த அனுதாபத்தை காட்ட முடியும் என்னும் கேள்வி தொக்கி நிற்பதாய் படுகிறது. இங்கு பிரச்சினையே அதுதானே! கிழே இருப்பவர்களிடம்தானே ஒவ்வொருவரும் இரக்கமற்று நடந்து கொள்கிறார்கள். அது பால் பேதமாக இருந்தாலும், வர்க்க முரண்பாடுகலாயிருந்தாலும், ஜாதீய அமைப்பாயிருந்தாலும்.

    தான், தனது, தனது நலன் என்னும் சிந்தனைகளே மேலோங்கி நிற்பது மிகப் பெரும் தடையாய் இருக்கிறது. அதைச் சரி செய்ய இப்பட்டிப்பட்ட சின்னச் சின்ன அசைவுகளை, சலனங்களை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டியிருக்கிறது.

    மெய்யப்பனுக்கு நீ யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். இந்த அமைப்புக்கு நாம் யார் என்பதை அடுத்துச் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. கெக்கேபிக்குணி!

    தங்கள் வருகைக்கும்,
    கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. விமலவித்யா அவர்களுக்கு!

    இருக்கலாம்.

    ஆனால், நமக்கு இருக்க வேண்டும், இல்லையா?

    பதிலளிநீக்கு
  21. மிஸ்டர் அநாமதேயம்!


    நூறு கோடி சொத்து உள்ளவன், சாதாரணமானவர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்கும், அன்றாடம் வாழ்வுக்கு மல்லுக்குக் கட்டுகிறவர்கள் சக மனிதனை ஏமாற்றுவதற்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. தவறுகளின் விளைவுகளை பார்க்கும் அதே நேரம் அதன் நோக்கங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கிறதே!

    அதற்காக தவறை நான் நியாயப்படுத்தவில்லை.

    யாரிடம் ஆத்திரம் கொள்வது, யாரிடம் அனுதாபம் கொள்வது என்று நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  22. The Main Role of the Trade Union is to defend the Livelyhood of its Members and also to correct them not to do such things in Future. In the Capitalist World the Magnitude of Punishment diminishes when the severety increases if it is done by those sit in Top. Hence we need not hesitate in defending our members - Raman, Vellore

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!